மகர சங்கராந்தி பொங்கல் பண்டிகை

மகர சங்கராந்தி பொங்கல் பண்டிகை

பிலவ வருடம் உத்ராயன புன்ய காலம் தை மாதம் 1ம் நாள் 14.01.2022
மகர சங்கராந்தி பொங்கல் பண்டிகை

சூரிய காயத்ரி
அஸ்வத் வஜாய வித்மஹே
பத்மஹஸ்தாய தீமஹிதன்னோ:
சூர்ய பிரசோதயாத்

சூரியன் தனுர் ராசியில் இருந்து மகர ராசியின் நுழைவதன் மூலம் உத்தராயனத்தில் பகலவன் சஞ்சரிக்கும் காலம் துவங்குகிறது. எனவே தான் இதை மகர சங்கராந்தி என அழைக்கின்றனர்.

சூரிய பூஜை மிகவும் முக்கியமான ஒன்று. நம் உடலில் கண்களுக்கும் தோல்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டால், சூரிய பகவானை வழிபட வேண்டும். மனதில் உறுதி, பலம் மற்றும் தேக ஆரோக்கியத்திற்கும் சூரிய வழிபாடு மிகவும் இன்றியமையாத ஒன்று.
யோகாவில் சூரிய நமஸ்காரம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

"போகி'யோடு தொடங்குகிறது பொங்கல் திருநாள். இந்திரனுக்கு "போகி' என்றொரு பெயர் உண்டு. எனவே இந்நாள், "இந்திர விழா'"வாகவும் இருந்திருக்கக்கூடும். மழை பொழிய வைக்கும் கடவுள் வருணன். அவனுக்கு அரசனாகத் திகழ்ந்து இயக்குபவன் இந்திரன். மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்! உயிர்கள் வாழும்! எனவே பண்டைய நாட்களில் வருணனின் அதிபதியான இந்திரனை "போகி" யன்று பூஜிக்கும் வழக்கமிருந்தது.

தற்போது, "பழையன கழிதலும், புதியன புகுதலும்" என்ற வகையில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முன்னரே வீட்டை வெள்ளையடித்துச் சுத்தம் செய்வார்கள். அப்போது தேவையற்ற பழம் பொருட்களை ஓரத்தில் ஒதுக்கி வைப்பார்கள். போகியன்று அந்தப் பழைய பொருட்களைத் தீயிலிட்டுக் கொளுத்துவது வழக்கம். அப்போது குழந்தைகள், சிறு பறை கொட்டிக் குதூகலிப்பர்.

தை பிறந்தால் வழி பிறக்கும்
தரணியிலே ஒளி பிறக்கும்
தை மகளின் வருகையிலே
பரணி சொல்லும் வழி பிறக்கும்

மார்கழி மாதக் குளிர் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய, தை மாதம் தன்னுடன் வசந்தத்தைக் கொண்டு வந்து, எல்லோரையும் மலர வைக்கின்றது. தமிழர் திருநாளாக பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் என்பது “பொங்கு"என்னும் சொல்லில் இருந்து வந்ததாகும்.

புது நெல் வந்திருக்கும் ஆதலால் அதைக் குத்தி அதில்தான் பொங்கலிட வேண்டும் என்பது அவர்கள் நம்பிக்கை. அறுப்புக் களத்தில் அறுத்த நெற்கதிர்களில் சிலவற்றை அழகாகப் பின்னி ஒரு அலங்காரம் போல் செய்து (அதிலிருக்கும் நெல் மணிகளுக்கு கொஞ்சமும் சேதம் வராமல்) அதை வீட்டு முன் வாசலில் தொங்க விடுவார்கள்.

சிறு சிட்டுக் குருவிகள் அந்த நெற்கதிர்களை அவற்றின் மேலேயே அமர்ந்து கொத்தித் தின்னும். அப்போது அந்த நெற்கதிர்ப் பின்னல் ஆடுவது பார்க்க அந்தக் குருவி ஊஞ்சலாடுவது போல அவ்வளவு அழகாக இருக்கும். குருவிகளுக்காகவேதான் அவற்றைப் பின்னுவார்கள். தனக்குக் கிடைத்த உணவை மற்ற உயிரினங்களோடும் பகிர்ந்துண்ணும் தமிழனின் பெருந்தன்மை அதில் தெரியும். உணவுச் சுழற்சி பற்றியும் சுற்றுச் சூழல் சமன்பாடு பற்றியும் இயற்கையைப் பற்றிய பட்டறிவு அதில் தெரியும். அதைப் பார்த்துத்தான் பாரதி காக்கை குருவி எங்கள் சாதி என்று பாடியிருக்க வேண்டும்.

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து. வளம், செழிப்பு, மகிழ்ச்சி, ஆனந்தம் ஆகிய எல்லா நலன்களும் எல்லோரின் உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்கவேண்டும் என்ற சிந்தனையை தரும் விழாவாக அமைந்துள்ளது. அதனையே பொங்கல் பொங்கி வரும் போது "பொங்கலோ பொங்கல்" என்று வீட்டில் உள்ள அனைவரும் சொல்லி ஆரவாரம் செய்து மங்கலஒலியாக குலவையிட்டு பானையில் அரிசியையும், பாலையும் இட்டு மகிழ்ச்சி பொங்கித் ததும்பும் விழா கழுத்துப்பகுதிகளில், மாவிலை கட்டி, விபூதிப்பூச்சுகளும், சந்தனம் குங்குமம் ஆகியவற்றால் பொட்டிட்டும், அலங்கரிப்பார்கள். தண்ணீரும் பாலும் சேர்ந்துப் பொங்கல் பானையை நிரப்பி, அடுப்பிலேற்றி பானையிலுள்ள பாலும்நீரும் சூடாகி நுரைத்துப்பொங்கும்போது "பொங்கலோ பொங்கல்" என்று சூரியனைப்பார்த்து வணங்கி நன்றி தெரிவிப்பது பண்பாடு பொங்தித்தள்ளும் அந்த நுரைத்த பால் எந்தத்திசையில் வழிகிறது என்று பார்த்துக் கொள்வார்கள்.

கிழக்கு, வடக்கு, நோக்கி பால்வழிந்தால் நல்லதென மகிழ்வார்கள். சிலர் பொங்கற் தண்ணீரைச் சேமித்து வைத்து, பின் தங்கள் விளைநிலங்களுக்குத் தெளிப்பார்கள். பால் போல் மனமும் நீர் போல் தெளிவும் வார்த்தையில் இனிமையும் கொண்டு சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்தும் மங்கல விழா
பொங்கல்..

தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது கோலப்போட்டி, உறியடித்தல், கபடி போட்டி, கலைநிகழ்ச்சிகள் நடக்கும். தை பொங்கலின் தாத்பர்யம் மாட்டுப் பொங்கல் அன்று மஞ்சள் நீரை மாமன் மகன், முறைப்பிள்ளைகள் மேல் தெளித்து சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வார்கள். பொங்கலன்று கிராமங்களில் கடைபிடிக்கப்படும் மரபுகள், பண்பாட்டு சிறப்புகளை, அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள்..

சூரியனில்லாத பூமி இருண்டு விடும். மழையோ, நீரோ இருக்காது. உயிர்கள் எதுவும் உற்பத்தியாகவோ, வாழவோ முடியாது. பூமியின் ஜீவாதாரமாக சூரியனின் இயக்கம் இருந்து வருகிறது. பொங்கல் என்பது லட்சுமி வீட்டிற்கு வரும் நாள் என்று எண்ணுவதால், அவளைத் தங்க வைப்பதற்காக வீட்டை விட்டு எதையும் வெளியேற்றக் கூடாது என்பது ஐதீகம்..

கரும்பு உழைப்பின் அருமையை நமக்குக் கற்றுத்தருகிறது. அதன் மேல்பகுதி உப்புத்தன்மையுடனும், அடிக்கரும்பு இனிமை மிக்கதாகவும் இருக்கும். வாழ்க்கையும் அப்படித்தான். இளமையில் கஷ்டப்பட்டு உழைக்க எந்த வித தயக்கமும் கொள்ளக்கூடாது. அப்படியானால் தான் முதுமையில் சிரமமில்லாமல் இனியவாழ்வு வாழ முடியும். இந்த உண்மையை உணர்ந்து கரும்பைச் சுவைக்க வேண்டும். உழைத்து வாழ்வில் முன்னேற்றம் பெற கரும்பு நமக்கு ஒரு நல்ல உதாரணம்.

பூமிப்பந்தின் ஆதாரமான சூரியன், உலகின் பசி போக்கும் உழவர்கள், படைப்புக் கருவிகளாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் தைத்திருநாள். வீடுகள், மாட்டுத் தொழுவங்களுக்கு வண்ணம் தீட்டி, பச்சரிசி, புது வெல்லம், செங்கரும்பு, மஞ்சள், மாக்கோலம், புத்தாடையுடன் பாரம்பரியம், பண்பாட்டை பறைசாற்றும் பண்டிகை இது. கால்நடைகளை நீராடச் செய்து, தான் உண்ட பொங்கலை அவற்றிற்கு பரிவுடன் அளிப்பர்.
பிழைப்புக்காக திசைகள் எட்டும் சென்ற பந்தங்கள் இந்நாளில் ஒன்றுகூடி மகிழும். மஞ்சுவிரட்டு, பாரம்பரிய விளையாட்டுகள் என செயற்கைத் தனம் இல்லாத குதூகலமாகத்தான். விவசாயிகள் தைத் திருநாளை கொண்டாடுகின்றனர்.

வீடுகளுக்கு வெள்ளையடித்தல், நிலங்களுக்குக் கழுவிப் பூச்சுக்களிடுதல், வளவினைக் கூட்டித் துப்பரவு செய்தல், கூட்டிய குப்பையை எரித்தோ, புதைத்தோ விடுதல், தெரு ஒழுங்கை யாகியவற்றையும் கூட்டித் துப்பரவு செய்தல், வளவு வேலிகளைப் புதிதாக அடைத்தல் போன்றன யாவும் வெறும் அழகிற்காக ஆற்றும் பணிகள் அன்று. புறத் தூய்மையின் அவசியத்தைப் பண்டிகையுடன் இணைந்த முன்னோரின் ஆழ்ந்த அறிவுக்கு அவை எடுத்துக் காட்டுக்களெனலாம்.

சூரியன் கடகக்கோட்டிலிருந்து மகரக் கோட்டுக்குச் செல்ல ஆறு மாதகாலம் எடுக்கின்றது, இதனைத் தெற்கு நோக்கிச் செல்லும் காலமாதலின் தட்சிணாயான புண்ணிய காலம் என்பர். பின்னர் மகரக்கோட்டிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் ஆறு மாதகாலத்தை உத்தராயண காலம் என்பர். இந்நிகழ்வு பூமி தனது அச்சில் இருந்து இருபத்துமூன்றரைப் பாகை சரிவாகச் சுற்றுவதால் ஏற்படுவதாகும். இவ்விரு காலங்களையும் அதாவது எமது ஒருவருட காலத்தை தேவர்க்குரிய ஒரு நாளாகக் கணிப்பர். உத்தராய காலமாகிய ஆறு மாதங்களும் ஒரு பகலாகவும், தட்சணாயண காலமாகிய ஆறுமாதங்களும் ஒரு இரவாகவும் கொள்ளப்படும். இரவை ஆறு சாமமாகக் கணிப்பின் ஒரு சாமம் என்பது இரண்டு மணித்தியாலங்கள் கொண்டதாகும். அவ்வாறு கணிப்பின் இரவின் இறுதிச் சமமாகிய வைகறைக் காலம் மார்கழி மாதமாகும். அடுத்து வரும் தைமாதம் உத்தராயணப் பகலின் உதய காலமாகும். அதனாலேயே தைமாதப்பிறப்பு வழிபாட்டுற் குரியதென்பது சமயம் கூறும் கருத்தாகும்.

விளைந்த புது நெல்லைக் குத்தியெடுத்த புத்தரிசியைக் கொண்டே பொங்கலிடவேண்டும் என்பது சம்பிரதாயம். ஆனால் இன்று நகரங்களில் வசிப்போர்க்கு இது சாத்தியமான தொன்றல்ல. எனினும் யாவரும் பொங்கற் பண்டிகையைக் கொண்டாடுகின்றார்கள். கரும்பு, மஞ்சள், இஞ்சி போன்று தாம் பயிரிட்டவற்றையும் பிடுங்கி மண் கழுவித் தூய்மை செய்து கொத்தாக வைத்துப் படையலுடன் வழிபடுவதும் நடைமுறையில் இருந்து வந்தது. இவ்வழக்கம் சிறிது சிறிதாகக் குறைந்து வருவதை நாம் இப்பொழுது அவதானிக்கலாம். எனினும் பழவகைகளையும் கரும்பு, இஞ்சி போன்றவற்றையும் தேடி வாங்கிப் படைக்கும் வழக்கம் தொடர்ந்து வருகின்றது.

பழவகைகளுடன் நின்றுவிடாது பல்வேறுவகையான பலகாரவகைகளையும் செய்து படைப்பதும், உண்டுமகிழ்வதும், உறவினர் வீடுகளுக்கு அனுப்பிவைப்பதும், வருவோருக்கு வழங்கி மகிழ்வதும் இப்பண்டிகையைச் சமூக உணர்வோடு கூடிய ஒரு பண்டிகையாக இனம் காண வழிவகுக்கின்றது.

ஆண்டுதோறும் பொங்கல் விழாவின் நிறைவாக காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

உற்றார், உறவினர்கள், நண்பர்களை கண்டு இனிப்புகள் வழங்கி சந்தோஷத்துடன் பொங்கல் விழாவை முடிப்பதே காணும் பொங்கலின் அம்சம்.

தைப்பொங்கல் தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது. மஞ்சள் தோரணங்கள் கட்டி, புது அரிசியில் பொங்கல் பொங்கி, கரும்பு உண்டு கொண்டாடப்படும் பொங்கல் விழா.

தைப்பொங்கல் வரலாறு

சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பொழியவும், நாடு செழிக்கவும் பெண்கள் இந்நோன்பைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த நோன்பை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, பகலவன், உதவிய கால்நடை, போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் பொங்கல் கொண்டாட்டமாக மாறியது. பொங்கல் பண்டிகையைப் பொறுத்தவரையில் எக்காலத்திலும் விவசாயம் சம்பந்தபட்டதாகவே இருந்துள்ளது என்பது யாரும் மறுக்க உண்மையாக இருந்து வருகிறது. "இந்திரவிழா" என்ற பெயரில் இலக்கிய காலத்திலேயே இருந்துள்ளது. மணிமேகலையின் ஆரம்பமான விழாவரை காதையில் "இந்திரவிழா" என்ற பெயரில் பொங்கல் கொண்டாடப்பட்டது. இந்த விழா, காவிரி பூம்பட்டினத்தில் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. இப்போது பொங்கல் தைப்பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என்ற மூன்று நாட்கள் மட்டுமே கொண்டாடப்படுகிறது. ஆனால், அந்த காலத்தில் 28நாட்கள் நடந்துள்ளதற்கான சான்றுகள் இருக்கிறது. முதன்முதலாக இந்திர விழா நடத்திய போது அதை நாட்டு மக்களுக்கு முரசறைந்து பொது அறிவிப்பாக அறிவித்தனர். இப்போது பொங்கல் ஊரையும், நாட்டையும் சுத்தம் செய்வது போல அப்போதும் நடந்துள்ளது. நகர வீதிகளில் பழைய மணலை மாற்றி புது மணல் பரப்பினர். காவல் தெய்வங்கள் முதல் சிவன் கோயில்கள் வரை சிறப்பு பூஜை நடைப்பெற்றது. இவ்விழா நாளில் பகைமை, பசி, நோய் நீங்க இறைவன் பிரார்த்தனை செய்யப்பட்டது. மழைக்குரிய தெய்வம் இந்திரன், அவனை வழிபட்டால், மாதம் மும்மாரி பெய்து பயிர் செழிக்கும் என மக்கள் நம்பிக்கை. பிற்காலத்தில், சூரியன் பற்றிய அறிவு மக்கள் வந்தவுடன் சூரியன் சந்தோஷத்தை நிர்ணயிப்பவர் என்ற நம்பிக்கை வந்து, தங்கள் கண் முன் காட்சி தரும் அந்த கடவுள் பொங்கல் படைத்து வழிபட்டனர்.

பூமி இருக்கும் நீர் ஆவியாக்கி மேலே கொண்டு சென்று, ஒன்றுக்கு பத்தாக மழை பெய்விப்பார் என்ற ரீதியில் இந்த நன்றியறிதல் தெரிவிக்கப்பட்டது. தாங்கள் அறுவடை செய்த புது நெல் தை முதல்நாளில் சமையல் இந்திர விழா என்ற பெயர் பொங்கல் என மாறியது.

உழவர் திருநாள்

பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.

பொங்கல்!

தை மாதம் பிறப்பதற்கு முன் அறுவடையாகின்றது. இதற்காகவே புதிய பானை வாங்கப்பட்டு, அதில் திருநீறும் குங்குமமும் இட்டு, அப்பானையை தெய்வீகமாகக் கருதி அதில் சர்க்கரைப் பொங்கல் செய்வது மரபு. பெரும்பாலும் கிராமப்புறங்களில், வாசலிலே வண்ணக் கோலமிட்டு, அதன் நடுவே பொங்கல் பானையை வைத்து, பானையின் கழுத்தில் மஞ்சள் கிழங்கை இலையோடு கட்டி, மணம் பரப்பும் பொங்கல் சோறு பொங்கியெழும்போது, "பொங்கலோ பொங்கல்' என்று கூறி மகிழ்வார்கள்.
இப்படித் திறந்த வெளியில் பொங்கல் வைப்பதால், சூரிய பகவான் அதை நிவேதனமாக ஏற்று மகிழ்கிறார். இதற்காக கூடவே கரும்பும் வைத்து, கடவுளுக்குப் படைப்பார்கள்.

தைப்பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே கொண்டாட்ட வெடிகள் வெடிக்க தொடங்கி விடும். பொங்கலுக்கு தேவையான பொருட்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். தமிழீழம், தமிழ்நாடு போன்ற இடங்களில் புதுப்பானை பலர் வாங்குவர்.

பொங்கல் பண்டிகை நான்கு நாள் பண்டிகையாகும். மார்கழி கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து புதியன புகுத்தல் வழக்கம்.
பொங்கல் உணவு சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், மிளகு பொங்கல் என வகைப்படும். மிளகு பொங்கல் காலை உணவாகவும் சர்க்கரைப் பொங்கல் இனிப்பாகவும் உண்ணப்படுகிறது. வெண் பொங்கல், பொங்கல் பண்டிகையின் போது பால், புது அரிசியைக் கொண்டு பொங்கல் பொங்கப்படுகிறது.

இது தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒண்று ஆகும். இதில் பல்வேறு சத்துகள் அடங்கும். பொங்கல் பண்டிகையின் போது வழமையாக எல்லா உழவர் இல்லங்களிலும் அறுவடையில் வந்த புது அரிசியைக் கொண்டு சர்க்கரைப் பொங்கல் பொங்கப்படுகிறது. உலையில் உள்ள நீரை பொங்கவிட்டு பொங்கல் செய்யப்படுவதானால், பொங்கல் என்பதை ஆகு பெயராகவும் கருதலாம்.

மாட்டுப் பொங்கல்

உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு. "பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல் பட்டி பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக" என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.

கால்நடைகளே நமது நாட்டில் செல்வத்தின் அடையாளமாக ஒரு காலத்தில் திகழ்ந்தன. "ஆயிரம் பசுவுடைய கோ நாயகர்" என்ற பட்டப் பெயர்களெல்லாம் புழக்கத்தில் இருந்தன.
"ஏரின் பின்னால்தான் உலகமே சுழல்கின்றது" என்றார் திருவள்ளுவர். அந்த ஏர் முனையை முன்னேந்திச் செல்பவை மாடுகளே! இதன் மூலம் மாடுகளே உலகை உயிர்ப்போடு வைத்துள்ளன எனக் கூறின் மிகையில்லை.
அந்த மாடுகளைக் கடவுளாகவே கருதி வழிபடுவதுதான் மாட்டுப் பொங்கலின் தத்துவம்.

பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் உறைவதாகப் பெரியோர்கள் கூறுகின்றனர். எனவே பசுவை வணங்குவதன் மூலம், அனைத்து தேவர்களின் ஆசிகளும் நமக்குக் கிடைக்கின்றன.

மாட்டுப் பொங்கலன்று பசுக்களுக்கு மஞ்சள் பூசி, திருநீறிட்டு, குங்குமம் வைத்து, மாலை போட்டு வணங்குவர். அதன் பசிக்குத் தேவையான உணவையும் படைப்பர்.
காளைகளுக்கு கொம்புகளில் வர்ணம் பூசி, காலில் சலங்கை கட்டி, "வீர நடை" நடக்க வைப்பர். பல வீடுகளில் அன்று காளை மாடுகளுக்கு "அங்க வஸ்திரம்" போர்த்தி, மரியாதை செய்வார்கள். ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டின் நாயகர்களும் காளைகளே!

காணும் பொங்கல்

இந்நாளில் மக்கள் தங்கள் உற்றார் உறவினரைச் சென்று சந்தித்து தங்கள் அன்பையும் உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து கொள்வர். இது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காம் நாள் இடம்பெறும்.

காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டி மன்றம், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து சகலமும் இடம் பெறும்.
இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்.

கணுப்பிடி

கணுப்பிடி இந்நாளின் சிறப்பு. இது ஒருவகை நோன்பு. உடன்பிறந்த சகோதரர்களுக்காக பெண்கள் செய்யும் நோன்பு. உடன்பிறந்த சகோதரர்கள் நலமும் வளமுமாய் வாழ சகோதரிகள் பிரார்த்திப்பது. பெரியோரைப் போற்றி வாழும் நற்பண்பும் இப் பண்டிகை மூலம் மக்கள் பெறும் சிறந்த பண்பாகும். சூரிய வழிபாட்டுடன் நின்று விடாது அயலிலுள்ள ஆலயங்களுக்குச் சென்று வழிபாடாற்றுவர். அதன்பின்னர் தனது மதிப்பிற்குரிய பெரியார்களுடைய இல்லங்களுக்குச் செல்வதும், செல்லும்போது சுவையான தின்பண்டங்கள் கொண்டு செல்வதும், வணக்கத்துக்குரிய பெரியோர்களை வழிபடுவதும் வழக்கம். தாய் தந்தையர், மாமன் மாமியர், அண்ணன் அக்கா போன்ற உறவுமுறையினர், தத்தா பாட்டி போன்ற முதியோர், பலராலும் போற்றப்படும் பெரியோர்கள், தமது ஆசிரியர்கள் போன்றோரை வழிபாடுவதும் ஆசிபெறுவதும் இப்பண்டிகை மூலம் நாம் பெறும் நற்பழக்கங்களாகும். இதனாற் பணிவுடையவர்களாக வாழும் பண்பை எம்மையறியாமலே நாம் பெற்றுக் கொள்ளுகின்றோம். எமது பிற்கால சந்ததியாருக்கும் நாம் கொடுக்கும் ஒரு நல்ல பழக்கவழக்கப் பயிற்சியாகவும் இது அமைந்து விடுகிறது.

ஜனவரி 14 எனக் குறிப்பிட்ட தேதியில் வரும் ஒரே தமிழர் பண்டிகை - பொங்கல் திருநாள். இது, தெற்குப் பகுதியில் இருந்து வடக்குப் பகுதிக்கு சூரியனின் இடப்பெயர்ச்சியை மையமாக வைத்து அமைந்தது. இதனால், வருடந்தோறும் வரும் இந்துப் பண்டிகைகளின் தேதிகளில் கண்டிப்பாக மாற்றம் இருக்கும். ஆனால், சூரியன் பெயரில் கொண்டாடப்படும் பண்டிகையான பொங்கல் தேதியில் மட்டும் பெரும்பாலும் மாற்றம் இன்றி, அது சரியாக ஜனவரி 14 அன்றே வருகிறது. இதற்கு, இது, இந்தியாவில் அறுவடைத் திருநாளாக நாடு முழுவதும் உள்ள விவசாயிகளால் கொண்டாடப்படுகிறது.

இது, அறுவடைத் திருநாளாக நாடு முழுவதும் உள்ள விவசாயிகளால் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பொங்கலை, வட மற்றும் மத்திய இந்தியாவில் 'மகர சங்ராந்தி' என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். இந்திக் காலண்டரின் மாக் மாதத்தின் முதல்நாளில் வருவதாலும் இதை மகர சங்ராந்தி என்றழைக்கிறார்கள். ஆனால், இந்தப் பண்டிகையில் பெரும்பாலான மாநிலங்களில் அரசு விடுமுறை கிடையாது. இதை வைத்தே மகர சங்ராந்தி அம் மாநிலங்களில் கொண்டாடப்படும் விதத்தை நாம் ஓரளவுக்குப் புரிந்து கொள்ளலாம்.

இது, தென் மாநிலங்களில் ஓரளவுக்கு தமிழகத்தை போல் இருப்பினும், மற்ற மாநிலங்களில் சுற்றுச்சூழல், பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் விளைச்சல்களைப் பொறுத்து அங்கு கொண்டாடப்படும் முறைகளிலும் நிறைய வேறுபாடு உண்டு. இதற்காகக் கூறப்படும் பெயர்களும் வேறாக இருக்கும் இந்தப் பண்டிகை நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் எப்படி எப்படி கொண்டாடப்படுகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

உபி, பீகார் மற்றும் ராஜஸ்தான்

உபி, பீகார், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அழைக்கப்படுகிறது. இந்நாளில் தம் பாவங்கள் தீர்ந்து மோட்சம் கிடைக்கும் என அருகிலுள்ள கங்கை, யமுனை, நர்மதா போன்ற புண்ணிய நதிகளில் குளித்து முடிப்பதே தலையாய கடமையாகக் கருதுகிறார்கள். இதனால், மகர சங்ராந்தியின் குதூகலம் மற்றும் கொண்டாட்டங்கள் நதிக்கரைகளில்தான் பார்க்கமுடியும். இங்கு ஊஞ்சல்களை அமைத்தும் ஆடி மகிழ்கிறார்கள். குளித்த பின் தானியங்களை பிராமணர்களுக்குத் தானமாக வழங்கிவிட்டு, இனிப்புகளை செய்து சாப்பிடுகிறார்கள். இவற்றில் உடலுக்குச் சூட்டைத் தரும் வெல்லம் மற்றும் எள் தவறாமல் இடம்பெறும். இது குளிர்காலம் என்பதே இதன் முக்கியக் காரணம்.

இத்துடன் கேழ்வரகுக் கிச்சடியும் செய்து சாப்பிடுகிறார்கள். ஒரே நாளில் முடிந்துவிடும் இவர்களுடைய இந்தப் பண்டிகையில் புத்தாடைகள் அணியப்படுவது இல்லை. கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும் உண்டு. அதில், அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் உணவுப் பொருட்களை பூஜையில் படைக்கிறார்கள். சூரியன் தெற்கு திசையிலிருந்து வடக்கு நோக்கி நகரத் துவங்கும் நாள் இது. எனவே, பெரும்பாலான கும்பமேளாக்கள் இந்த நாளில்தான் தொடங்குகின்றன. குறிப்பாக இந்த நாளில் தந்தை மற்றும் மகனுக்கு இடையிலான உறவு வலுக்கும் என்றும், குடும்பப் பொறுப்பை மகன் ஏற்று நடத்தும் நாளாகவும் இது அனுசரிக்கப்படுகிறது. இந்தப் பண்டிகையில் செய்யப்படும் இனிப்புகளின் பெயர் சிக்கி (வேர்க்கடலை மற்றும் வெல்லம்), கஜக் (வெள்ளை எள் மற்றும் வெல்லம்), தில்கா லட்டு (வெள்ளை எள், கோவா மற்றும் வெல்லம்). பீகாரில் மட்டும் அவலுடன் தயிர் மற்றும் வெல்லம் கலந்து ஒரு பலகாரம் செய்து சாப்பிடுகிறார்கள்.

ஒரிசா மற்றும் சத்தீஸ்கர்

ஒரிசா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் மட்டும் ஆட்டம், பாட்டம் என இதை ஒரு வாரம் முழுவதும் கொண்டாடுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள் என்பதால், தம் அறுவடைகளை முடித்த லாபம், ஒவ்வொரு குடும்பத்தினரின் கைகளிலும் கண்டிப்பாக இருக்கும். எனவே, இந்த சந்தோஷத்தைக் கொண்டாட ஆண், பெண் இருபாலருமே மது அருந்தி மயங்கி இருப்பதும் பண்டிகையின் ஒரு அங்கமாகக் கருதுகிறார்கள். இந்த நாளுக்காக ஒரிசாவின் பூரி ஜெகநாத் கோயிலில் இரண்டுமுறை அலங்காரங்கள் செய்து சிறப்புப் பூஜைகள் செய்கிறார்கள். சத்தீஸ்கர் கோயில்களிலும் சிறப்புப் பூஜைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்படுவது உண்டு.

மகராஷ்டிரா

மகராஷ்டிராவில் இந்தப் பண்டிகையின் போது கருப்பு எள் மற்றும் வெல்லம் கலந்த இனிப்புகளை பரிமாறிக் கொள்வார்கள். கருப்பு எள்ளை மராத்தியர்கள் மிகவும் புனிதமாகக் கருதுவதால், அன்றைய நாளில் சில பழமைவாதிகள் கருப்புநிற உடைகளை அணிவதையும் ஒரு பாரம்பரியமாக கடைபிடிக்கிறார்கள். குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் சாதாரண புத்தாடை உடுத்துவார்கள். சொந்த நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் தங்கள் நிலங்களில் கரும்பு, வெல்லம் மற்றும் எள்ளை பானையில் வைத்து பூஜை செய்வார்கள். நகரவாசிகள் மாலையில் பூஜை செய்து வெல்லம், எள்ளு மற்றும் கரும்புத் துண்டுகளை ஒரு சிறிய பானையில் போட்டு பூஜை செய்வார்கள். இதற்கு அருகிலுள்ள பெண்களை ஒற்றைப்படை எண்ணிக்கையில் அழைத்து, அவர்களுக்கும் சிறுசிறு பானைகளில் வெல்லம், கரும்பு மற்றும் எள் ஆகியவற்றைப் போட்டுக் கொடுக்கிறார்கள். இந்த நாள் முதல் நல்ல காற்று இங்கு வீசத் தொடங்குவதால், பல்வேறு நிறங்களில் விதவிதமானப் பட்டங்களை செய்து மாலையில் பறக்கவிட்டு விளையாடும் பழக்கம் அவர்களிடம் உள்ளது.

குஜராத்

இந்த மாநிலத்திலும் மகர சங்ராந்தி என்ற பெயரில் கொண்டாடினாலும், பட்டங்கள் பறக்கவிடும் பண்டிகை என்றுதான் அதைக் கூற வேண்டும். அந்த அளவுக்கு ஒவ்வொரு வீட்டிலும் நபருக்கு ஒரு பட்டம் எனக் காலை முதல் மாலை வரை பறக்க விட்டபடியே இருக்கிறார்கள். பட்டங்களுக்காகவே மகர சங்ராந்தி அன்று அகில உலக அளவில் பட்டங்கள் பறக்கவிடும் போட்டிகளை அகமதாபாத், ராஜ்கோட், பரோடா மற்றும் சூரத் ஆகிய நகரங்களில் அரசே ஏற்று நடத்திவருகிறது. ஏராளமானவர்கள் கலந்துகொள்ளும் இந்தப் போட்டியில் பார்வையாளர்களாக வரும் வெளிநாட்டவர்களும் பட்டம் விடுவதற்காகப் பெரும்பாலான எண்ணிக்கையில் பங்கேற்பது உண்டு.

இந்த நாளில் விதவிதமான டிசைன்களில், பலவர்ண நிறங்களில் பறக்க விடப்படும் பட்டங்களைப் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். அன்றைய தினம் அரசு விடுமுறை என்றாலும், புத்தாடைகள் அணிவது கிடையாது. இங்குள்ளவர்களுக்கு பலவகைகளான காய்கறிகள் சேர்த்து சமைக்கப்படும் 'உண்டியா' எனும் பதார்த்தத்தை பூரியுடன் சேர்த்து சாப்பிடுவதென்றால் கொள்ளைப் பிரியம். இவற்றை செய்து விற்பதற்கென்றே சாலையோர, தெருவோர திடீர் கடைகள் உருவாகி விடும்.

பஞ்சாப், டெல்லி, இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஹரியானா

பஞ்சாப்பில் 'லொஹரி' என்றழைக்கிறார்கள். இந்த மாநிலத்தில் இருந்து பிரிந்த இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஹரியானா, பஞ்சாபிகள் அதிகம் வாழும் டெல்லி ஆகிய மாநிலங்களிலும் இதை லொஹரி என்றே கொண்டாடுகிறார்கள். ஆனால், இது பஞ்சாபிகளின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரங்களை முன்நிறுத்தும் பண்டிகையாக இருப்பதால், அங்குள்ள அனைத்து மதத்தவர்களும் இதைக் கொண்டாடுகிறார்கள். இந்த லொஹரி 13ஆம் தேதி இரவு துவங்கி மறுநாள் வரை நீடிக்கும். குறிப்பாக 13.ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு குடும்பத்தார் அனைவரும் வந்து, தீயை மூட்டி அதைச் சுற்றிலும் அமர்ந்து கொள்வார்கள். தெருவாசிகள், இப்படி பொது இடங்களில் தீமூட்டி அமர்ந்துகொண்டு கொண்டாடுவது உண்டு. இதற்கேற்றபடி இந்தக் காலங்களில் அங்கு கடும் குளிர் நிலவுகிறது. அப்போது பாரம்பரிய பாடல்களுடன் நடனமாடி மகிழ்கிறார்கள். இங்கும் எள் மற்றும் வெல்லம் கலந்து செய்த இனிப்பு வகைகள் பரிமாறப்படும். அந்த வருடம் ஆண் பிள்ளைகள் பிறந்த பஞ்சாபிகளின் வீடுகளில் லொஹரி சிறப்புத் திருவிழாவாக இருக்கும். இந்த நாளில் வேண்டுதல் செய்துகொள்வதும் உண்டு. எள், வெல்லம் மற்றும் பால் கலந்த இனிப்புகள் அதிகம் செய்வார்கள்.

அசாம்

இம் மாநிலத்தில் 'போஹாலி பிஹு' (உணவுப் பண்டிகை) என்ற பெயரில் அசாமிய காலண்டரின் 'மாக்' மாதத்தின் முதல் நாளாக ஜனவரி 15-ல் கொண்டாடுகிறார்கள். இதன் முதல் நாள் விசேஷம் மாலையில் உருக்கா என்ற பெயரில் தொடங்குகிறது. அந்த நாளில் சொந்தபந்தங்கள் அனைவரும் அல்லது குடும்பத்துடன் ஒரே இடத்தில் கூடி இரவு விருந்தை அசைவ உணவுடன் உண்டு மகிழ்வார்கள். இரண்டாவது நாள், விடியலில் குளித்து மூங்கில் மற்றும் வைக்கோல் கொண்டு 'மேஜி' என்றழைக்கப்படும் ஒன்றை பிரமிடுகள் வடிவில் செய்வார்கள். இதை அறுவடை செய்த நிலங்களில் அமைத்து பூஜை செய்து நாம் போகியில் எரிப்பதுபோல் எரித்து விடுவார்கள். ஆனால், இதில் அவர்கள் பழைய சாமான்கள் எதையும் போடுவதில்லை. பிறகு பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுகிறார்கள். அன்றைய தினம், அவலில் தயிர் கலந்து ஒரு உணவுப்பண்டம் மற்றும் எள்ளில் வெல்லம் கலந்து ஒரு இனிப்பு சாப்பிடுவார்கள். சிம்பிளாக சாப்பிடுவார்கள். இந்தப் பண்டிகையில் அக்கம், பக்கம் உள்ளவர்கள் ஒருவொருக்கொருவர் அழைத்துக்கொள்வார்கள். அசாம் மாநில அரசு இரண்டு நாள் அரசு விடுமுறை அளிக்கிறது. இங்கு இப்பண்டிகைக்குப் புத்தாடைகள் அணிவது உண்டு.

ஆந்திரா

இந்தப் பண்டிகையில் முக்கியமாக முன்னிறுத்தப்படுவது பலவர்ணக் கோலங்கள். இங்கும் மகர சங்ராந்தி என்ற பெயரில் அழைக்கப்பட்டாலும், பெரும்பாலும் அது நம் பொங்கல் திருநாளைப் போல்தான். முதல் நாள் போகி, மறுநாள் மகர சங்ராந்தி மற்றும் மூன்றாவது நாள் கன்னுமா என மூன்று நாட்களுக்குக் கொண்டாடுகிறார்கள். போகியில் பழையனவற்றை எரித்து, மாலையில் கொலு வைக்கிறார்கள். மகர சங்ராந்தி அன்று காலையில் குளித்து பூஜை செய்து, பானையில் சூரியப் பொங்கல் வைத்து உண்டு மகிழ்கிறார்கள். இவர்களின் கன்னுமா என்பது மாட்டுப் பொங்கலாகும். முதல் இருநாள் மட்டும் அரசு விடுமுறை என்றாலும், கிராமங்களில் கன்னுமாதான் மிகவும் விசேஷம். இந்த நாளில் மாடுகளின் ரேஸ், கோழி சண்டை போன்ற கிராம விளையாட்டுக்கள் உண்டு. மகர சங்ராந்தி வரை இதற்கு முன்பாக வரும் மாதம் முழுவதும் விடியற்காலை பூம்பூம் மாட்டுடன் வருபவர்களுக்கு தானியங்களை பிச்சையாக அளிப்பார்கள்.

கர்நாடகா

மகர சங்ராந்தி என்ற பெயரிலேயே அழைக்கப்படும் பொங்கல் இங்கு ஒரேஒரு நாள் மட்டும் கொண்டாடப்படுகிறது. அரசு விடுமுறையும் கிடைக்கும் இது விவசாயிகள் இடையே மிகவும் பிரபலம். அன்றைய தினத்தில் விவசாயிகள் குளித்துவிட்டு அறுவடை தானியங்களுடன் தங்கள் வேளாண்மைக் கருவிகளையும் வைத்து பூஜை செய்வார்கள். இந்தப் பூஜையில் வைக்கப்பட்ட இளநீர்களை எடுத்துச்சென்று அருகிலுள்ள மலைகள் மீதுஏறிநின்று வேகமாக கீழே தூக்கி வீசுவார்கள். அது விழும் தூரத்திற்கு தங்கள் கிராம எல்லைகள் விரிந்து வளரும் என்பது நம்பிக்கை. மைசூர் மற்றும் மாண்டியா பகுதிகளில் மட்டும் மாட்டு ரேஸ் நடக்கிறது. இதுபோல், வெவ்வேறு பகுதிகளில் பல்வேறு விதமான சடங்குகள் உண்டு.

இதை நகரங்களில் பிராமணர்கள் மட்டும் புத்தாடை அணிந்து சற்று விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். மற்றபடி பானையில் பொங்கல் வைக்கும் பழக்கம் இல்லை. கோயில்களில் சிறப்புப் பூஜைகள் உண்டு. வெல்லம், கரும்பு, வேர்க்கடலை மற்றும் எள் ஆகியவற்றை ஒரு சிறிய பாக்கெட்டுகளில் ஒன்றாகப் போட்டு உற்றார், உறவினர்களுக்கு கொடுத்து மகிழ்கிறார்கள்.

கேரளா

கேரளாவில் பொங்கல் தமிழக எல்லையில் உள்ள சில மாவட்டங்களில் மட்டும் கொண்டாடப்படுகிறது. மற்ற இடங்களின் கோயில்களில் அன்றைய தினத்தில் சிறப்பு ஆரத்திகள் எடுக்கப்படும். மற்றபடி புத்தாடை, புது உற்சாகம் மற்றும் அரசு விடுமுறை என எதுவும் கிடையாது. ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு அனுசரிக்கப்படும் தினம் மட்டும் அந்தக் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் விசேஷம். திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றங்கால் பகவதி அம்மன் கோயிலில் வருடந்தோறும் நடைபெறும் விசேஷத்தில் மட்டும் லட்சக்கணக்கான மக்கள் கூடி பொங்கல் வைக்கிறார்கள். பெருமளவில் தமிழர்களும் கலந்துகொள்ளும் அது மற்றொரு தினத்தில் கொண்டாடப்படும் பொங்கல் தவிர வேறு ஒன்றல்ல.

தைப் பொங்கல் இயற்கையோடும் கிராமிய மணத்தோடும் கூடிய இந்த விழா தமிழர்களின் திருநாள் என்பது ஒரு மகிழ்ச்சிக்குரிய விஷயம் அல்லவா. கிராமிய மணம் கொண்ட இந்த விழா இன்றும் நகர்ப் புறங்களை விட கிராமத்தில்தான் அதிகமாகக் கொண்டாடப்படுகிறது. சூரியனின் ஒளியால் உயிர் பெறும் அனைவரும் சூரியனுக்கு நன்றி சொல்லும் நாள் இது.

மாதங்களில் சிறந்த மார்கழியில் அழகான கோலங்கள் இட்டு அதன் நடுவே வைக்கப்பட்ட பசுஞ்சாணியும், பறங்கிப் பூவும் வரட்டியாகத் தட்டப்படுகின்றன. சூரியனின் தேர் தெற்கு திசையில் இருந்து வடக்குபக்கமாகத் திரும்புவதாகவும் ஒரு ஐதிகம் உண்டு. எனவே தை மாதம் தொடங்கி ஆனி மாதம் வரை “உத்தராயணம்” என்று சொல்லுகின்றனர். நகர்ப்புறங்களைவிட கிராமங்கள்தான் பொங்கலைக் கண்டுகளிக்க சிறந்த இடமாகும். வீடுகள் அனைத்தும் சுண்ணாம்பும், காவியும் அடிக்கப் பெற்று வாசல்கள் தோறும் பனம்பூவும், தென்னங்குருத்தும், அலங்கரிக்கும் அழகே தனிதான். புத்தம் புதிய மண்பானையில் திறந்த வெளியில் அடுப்பு ஏற்றி பானையில் பசுமஞ்சள் கொத்து கட்டி பால் பொங்கிவரும் அழகினை பார்த்துக் குலவை பாடும் பெண்களை கிராமத்தில் மட்டுமே பார்க்க முடியும்.

நகரத்தில் தொலைக்காட்சி நிகழ்வுகளாக இவை இப்பொழுது காட்டப்பட்டுக்கொண்டு இருக்கிறது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடியாத பனிப் பொழிவின் இடையே தன் பொற்கிரணங்களை வீசிக் கிளம்பிவரும் சூரியனை வணங்கி தாய்மார்கள் தரும் பால்பொங்கலும், புதிதாக அறுவடை செய்யப்பட்ட செங்கரும்பின் ருசியும், முற்றி விளைந்த பறங்கியும், பூசணியும் போட்டு செய்யப்படும் கூட்டும் வருடா வருடம் பொங்கல் எப்பொழுது வரும் என்று நம்மை ஏங்க வைக்கும் விஷயங்கள் அல்லவா. இனிப்புப் பொங்கலுடன் சூடாக ஆவி பறக்கும் குறுமிளகும், சீரகமும், முந்திரியும் சேர்ந்த வெண்பொங்கலும், நீயா நானா என்று சுவையல் போட்டிபோடும் சுவாரசியமான நாள்தான் தைப்பொங்கல் திருநாள்.
பொங்கலும் கூட்டும் செய்யும் முறையை நாம் இப்பொழுது பார்க்கலாம்.

புதுபச்சரிசி - கால் கிலோ
புது வெல்லம் - 400 கிராம்
பாசிபருப்பு - 50 கிராம்
நெய் - கால் கிலோ
முந்திரி, ஏலக்காய்தூள் - 20 ஒவ்வொன்றும்
ஜாதிக்காய் தூள் - 20 கிராம்
உலர்ந்த திராட்சை - 20 கிராம்
ஜாதிகாய் தூள் ஒரு சிட்டிகை ஏலக்காய்தூள் ஒரு ஸ்பூன், பால் - அரை லிட்டர்

புதுப்பானையை நன்கு கழுவி பாலை ஊற்றி அடுப்பில் ஏற்றவேண்டும். அரிசியும் பாசிப் பருப்பும் இளஞ்சூடாக வறுத்து பின் நீர்விட்டு களைந்து பாலில் சேர்க்கவேண்டும், மேலும் இரண்டு கோப்பை நீர்விட்டு அரிசியும் பருப்பும் நன்றாகக் குழையும் வரை வேக வைக்கவேண்டும். வெல்லத்தை பொடியாக செய்து குழைந்த சாதத்தில் நன்றாக சேர்த்து பொங்கல் பதம் வரும் வரை கிளறவேண்டும். நெய்யை சூடாக்கி ஜாதிக்காய் தூள், ஏலக்காய் தூள், முந்திரி, திராட்சை ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து பொங்கலில் சேர்த்து கிளறி பரிமாறவேண்டும்.

ஏழு கறி கூட்டு :-
பூசணிக்காய் - 1 கீற்று
பறங்கிக்காய் - 1 கீற்று
அவரைக்காய் - 100 கிராம்
கொத்தவரை - 100 கிராம்
உருளைக்கிழங்கு - 100 கிராம்
சர்க்கரை வள்ளி கிழங்கு - 10 கிராம்
முருங்கைகாய் - 2
வற்றல் மிளகாய் - 8
தனியா - 6 டீஸ்பூன்
கடலை பருப்பு - 4 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 6 டீஸ்பூன்
புளி - ஒரு பெரிய எலுமிச்சை அளவு
உப்பு தேவைக்கு
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
தாளிக்க - அரை கரண்டி எண்ணெய்
கடுகு, உளுத்தம் பருப்பு - தலா 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
அரிசி மாவு - 2 ஸ்பூன்
வெல்லம் - ஒரு சிறிய துண்டு

புளியை ஊற வைத்து நன்கு கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். காய்கள் அனைத்தையும் ஒன்றரை இன்ச் நீளத்திற்கு மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். தனியா, மி.வற்றல், க.பருப்பு, தேங்காய் துருவல் ஆகியவற்றை எண்ணெய் சிறிது விட்டு நன்றாக வறுத்துக் கொள்ளவும். கரைத்த புளிநீரில் காய்களை லேசாக வதக்கி போட்டு உப்பு மஞ்சள்தூள் போட்டு வேகவைக்கவும். வறுத்த சாமான்களை நன்றாக விழுதாக அரைத்து கொதிக்கும் காய்களுடன் சேர்த்து காய்களை நன்றாக வேகவிடவும். அரிசி மாவை சிறிது நீரில் கரைத்து கொதிக்கும் குழம்பில் போட்டு கருவேப்பிலை வெல்லம் சேர்த்து கிளறவேண்டும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு உ.பருப்பை தாளித்து சேர்க்கவும். சுவையான பொங்கலும், ஏழுகறி கூட்டும் உங்களை சாப்பிட வா வா என்றழைக்கும் நிச்சயமாக.

வெண்பொங்கல்
புது அரிசி பச்சரிசி - 200 கிராம்
பாசிபருப்பு - 50 கிராம்
நெய் - 200 கிராம்
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவைகேற்ப
கருவேப்பிலை - இரண்டு கொத்து
முந்திரிபருப்பு - 50 கிராம்

செய்முறை : பருப்பையும், அரிசியையும் இளஞ்சூடாக வறுத்துக் கொள்ளவேண்டும். அதை நன்றாகக் களைந்து 4 கோப்பை தண்ணீர் விட்டு மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும். நன்கு குழைந்த இந்த பொங்கலில் நெய்யில் வறுத்த மிளகு, முந்திரி, சீரகம், கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

பொங்கல் பண்டிகையில் சூரிய வழிபாடு
ஆண்டு முழுதும் எத்தனையோ பண்டிகைகள் வந்தாலும் அனைத்தையும்விட உயர்வானதாகச் சொல்லப்படுவது, பொங்கல் பண்டிகை.

ஆயுளும் ஆரோக்யமும் அளித்து ஆனந்த வாழ்வு பெற அருளும் ஆதித்யனை வழிபடும் இந்தத் திருநாளின் ஆரம்பம் எது தெரியுமா?
கோவர்த்தன கிரிதாங்கி நின்று கோபர்களை இந்திரனின் கோபமான மழையில் இருந்து காத்தான். கோபாலன். தேவராஜனை அன்று வரை வழிபட்ட அனைவரையும், பகலவனைப் பணியச் சொன்னான் பரந்தாமன். இது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அதற்கு முன் ராம அவதாரத்திலேயே சூரிய வழிபாட்டைத் தொடங்கிவிட்டான் சுதர்சனதாரி.
ராம, ராவண யுத்தத்தின்போது, ராமச்சந்திரனுக்குத் தளர்ச்சியும் சோர்வும் ஏற்படாமல் இருக்க, கதிரோனை வழிபடச் சொன்னார் அகத்திய மாமுனி. ஆதித்ய ஹ்ருதயம் எனும் அற்புத மந்திரமும் உபதேசித்தார். அப்படியே செய்து ராவணனை வென்றார் ராமபிரான்.

கிருஷ்ண அவதாரத்தில் இன்னொரு சமயத்திலும் சூரிய வழிபாடு சூழ்வினை போக்கும் என சுட்டிக்காட்டியிருக்கிறான் கோவிந்தன். தன் ப்ரியத்துக்கு உரிய நாரதரை, தன் மகன் சாம்பன் (ஜாம்பவதிக்கும் கிருஷ்ணருக்கும் பிறந்தவன்) கேலி செய்ததால் கோபம் கொண்டு, பெருநோய் பீடிக்க சாபமிட்டான் சக்ரதாரி. சாபவிமோசனமாக, நதிக்கரையில் பொங்கல் இடும்போது அந்த அடுப்பின் புகைபட்டு நோய் நீங்கும் என்றார்.

இவை அனைத்தையும் விட மேலாக இறைவனும் இறைவியும் தங்களின் பார்வையால் பார் முழுதுக்கும் படியளந்து பசி தீர்ப்பதாகச் சொல்கின்றன புராணங்கள். இறைவனின் விழிகள் சூரிய, சந்திரன் என்றும் கூறுகின்றன. அதாவது, வெப்பமும் தட்பமும் இணைந்த இயற்கை சூழலால் இவ்வுலகில் பயிர்கள் செழித்து, உயிர்களின் பசி நீங்க பகவான் அருள்கிறார் என்பது அர்த்தம்.
தென்திசையில் பயணிக்கும் பகலவன், வடதிசைக்கு மாறும் தைமாத முதல் நாளை உத்தராயன புண்யகாலம் என்கின்றன வேதங்கள். அந்தநாளில் சூரியனை வழிபடுவது, சூழ்வினைகளை சுட்டெரித்து வாழ்வினை வளமும் நலமும் நிறைந்ததாக ஆக்கும் என்பது ஐதிகம்.

எப்படிச் செய்வது சூரிய பூஜை?

முன்பெல்லாம் வீட்டின் முற்றத்தில் அடுப்பு வைத்துப் பொங்கலிடுவர். அல்லது வீட்டின் வாசலில் குடும்பத்தினர் எல்லோரும் கூடிநின்று குலவையிட்டுப் பொங்கல் படைப்பார்கள். ஆனால் இக்காலத்தில் அது இயலாது என்பதால், அவரவர் வீட்டு வழக்கப்படி அடுப்படியைத் தூய்மை செய்து கோலமிடுங்கள்.

அடுப்பிற்கு மஞ்சள் குங்குமம் இடுங்கள். புதிய பானை அல்லது நீங்கள் வழக்கமாகப் பொங்கல் வைக்கும் பானையில் அவரவர் வழக்கப்படி பொட்டு வையுங்கள். பானையின் கழுத்தில் மஞ்சள் கொத்தினைக் கட்டுங்கள். பின்னர் சுபமான நேரத்தில் பொங்கல் பானையை அடுப்பில் ஏற்றி பொங்கல் செய்யுங்கள்.

பானையில் இருந்து பால் பொங்கிடும்போது உங்கள் வீட்டுச் சுட்டிகள் மட்டுமல்லாமல் நீங்களும் ஒன்றாகச் சேர்ந்து உரக்கச் சொல்லுங்கள். `பொங்கலோ பொங்கல்' இது ஆண்டு முழுதும் உங்கள் வீட்டில் ஆனந்தம் பொங்கச் செய்யும் வழிபாடு என்பதால் கூச்சப்படாமல் குரல் எழுப்புங்கள்.

பொங்கல் தயார் ஆனதும் அவரவர் வழக்கப்படி குலதெய்வத்தின் முன்போ, இஷ்ட தெய்வத்தின் முன்போ அல்லது சூரியனின் ஒளிவிழும் இடத்திலோ வைத்து, விளக்கேற்றி, பொட்டிட்டு, பூப்போட்டு, தூப, தீபம் காட்டி பிறகு பொங்கலை நிவேதனம் செய்யுங்கள்.

இது நன்றி தெரிவிக்கும் திருநாள் என்பதால், உங்கள் வாழ்வில் உங்களின் முன்னேற்றத்திற்கு உதவிய உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்று மனதார வேண்டுங்கள்.
நன்மைகள் நாளும் சூழ்ந்திருக்க சூரியனை வேண்டுங்கள்!

மனம் இனிக்கப் பொங்கல், மனை சிறக்க மஞ்சள், நலம் சிறக்க கரும்பு, நாளும் கோளும் நன்மைகள் செய்ய நல்வாழ்த்துக்கள் என எல்லாமே இனிமையாய் அமைந்த பொங்கல் திருநாளில் இல்லாதவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். எந்நாளும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும் அது நீங்காது தங்கும்.

தைப்பொங்கலுக்கும் கிருஷ்ணருக்கும் சம்பந்தம் உண்டா என்றால் உண்டு. கிருஷ்ணரின் மகன் ஆன சாம்பன் என்பவன் துர்வாச மஹரிஷி வந்தபோது அவரைக் கேலி பேசியதால் அவன் உடல் நலம் கெட்டுப் போய் தோல் நோயால் பீடிக்கப் பட சாபம் கிடைத்தது. அந்த சாபத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியாத காரணத்தால் கிருஷ்ணரும், துர்வாசரும், அவனை சூரியனைப் பூஜிக்கச் சொல்கின்றனர். சந்திரபாகா நதிக்கரையில் சூரியனைப் பூஜிக்கின்றான் சாம்பன் அந்த நாள் தான் மகர சங்கராந்தி எனச் சொல்லப் படுகின்றது. முனிவர்களின் பத்தினிகள் அங்கே நதிக்கரையில் ஒன்று கூடி சூரிய பகவானை வேண்டி விரதம் இருந்து பொங்கல் வைத்து வழிபட்டு வந்தார்கள். சாபம் நீங்க நதிக்கரைக்குச் சென்ற சாம்பன் தானும் அதுபோல் விரதம் இருந்து சூரிய வழிபாடு செய்கின்றான். அதுவே மகர சங்கராந்தி எனச் சொல்லப் படுகின்றது.

இந்தப் பண்டிகை இந்தியா பூராவும் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப் படுகின்றது. அஸ்ஸாம்,மணிப்பூர் போன்ற இடங்களில் "போகாலி பிகு" என்ற பெயரில் இந்த விழா அறுவடைத் திருவிழாவாகக் கொண்டாடப் படுகின்றது. பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் "லோகிரி" என்று அழைக்கப் படுகின்றது. குஜராத், மஹாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் "மகர சங்கராந்தி" என்ற பெயரில் அழைக்கப் படுவதுடன் அன்று எள்ளுடன் சேர்த்த இனிப்புகளையும் பரிமாறிக் கொள்வார்கள். பஞ்சாப், ஹரியானாவில் சோளப்பொரி, அரிசி போன்றவற்றில் இனிப்புச் சேர்த்து நெருப்பில் இட்டு ஆடிப் பாடுவார்கள். காஷ்மீரத்தில் இந்நாளில் பருப்பு, அரிசி, நெய் கலந்த கிச்சடி செய்து அனைவருக்கும் விநியோகித்துக் கொண்டாடுகின்றனர்.

இலங்கையில் மார்கழிமாதம் முழுதும் வீட்டில் கோலம் போடும்போது சாணப் பிள்ளையார் பிடித்து வைத்து, அவை மொத்தத்தையும் சேர்த்து பொங்கலுக்கு மறுநாள் பிள்ளையாரை வழிபட்டுப் பிள்ளையார் பொங்கல் எனக் கொண்டாடுவார்கள் எனத் தெரிய வருகின்றது. உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் சங்கராந்தி அன்று புண்ணிய கால ஸ்நானம் என்னும் வழிபாடு முக்கியமாய்க் கருதப் படுகின்றது. அன்று கங்கை, யமுனை, நர்மதை போன்ற புண்ணிய நதிகளில் நீராடுவதைச் சிறப்பாய்க் கருதுகின்றனர். நம் மாட்டுப் பொங்கல் போன்று அங்கேயும் கோபூஜை செய்வதுண்டு. அவ்வளவு ஏன்?? அமெரிக்கா என்ற பொதுவான பெயரில் அழைக்கப் படும் யு.எஸ்.ஸிலும் நவம்பர் மாதம் அறுவடை முடியும் நேரம், அந்த வருஷத்து விளையும் காய், கனிகளை வைத்து "Thanks Giving Day" என்று கொண்டாடுகின்றனர்.

கிருஷ்ணாவதாரத்தில் சூரிய வழிபாடு நதிக்கரையில் செய்யப் பட்டதாய்ச் சொல்லப் பட்டாலும், அதற்கும் முன்னரே ராமாயண காலத்தில் ஸ்ரீராமர், ராவணனை வெல்வதற்காக அகத்தியரின் அறிவுரைப்படி ஆதித்ய ஹ்ருதயம் படித்து சூரியனுக்காக விரதம் இருந்து, பின்னர் போருக்குப் புறப்பட்டதாய் வால்மீகி சொல்கின்றார். சூரியனை வழிபடுவது என்பது தொன்று தொட்டு இருந்து வந்திருக்கும் ஒரு வழிபாடு ஆகும். நம் கண்ணுக்கு அன்றாடம் தெரியும் நிதரிசனக் கடவுள் சூரியனே ஆகும். தென் திசையில் பயணித்துக் கொண்டிருந்த சூரியன் தன் பயணத்தை வடதிசைக்கு மாற்றும் நாளே உத்தராயன புண்ணியகாலம் என்றழைக்கப் படுகின்றது. இந்த வடதிசைக்கு சூரியன் மாறும் நாளே தை மாதம் முதல் தேதியன்று நம் தமிழ்நாட்டில் பொங்கலாகக் கொண்டாடப் படுகின்றது. சூரியன் இல்லையேல் மழையும் இல்லை, மண் வளமும் இல்லை, தட்பமும், வெப்பமும் இணைந்த சூழலில் தான், பயிர், பச்சைகள் செழிப்பாய் வளரவும் முடியும். ஆகவே விஞ்ஞான ரீதியாகவும் சூரிய ஒளி இன்றி எதுவும் செய்ய முடியாதல்லவா? அதற்கான நன்றி நவிலலே பொங்கல் என்றும் கூறலாம்.

போகி அன்று பழையன கழித்து, புதியன வாங்குவதையும், வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரித்தும் கொண்டாடுகின்றோம். இந்தப் பொருட்களை எரிக்கும்போது சிறு குழந்தைகள் "போகி மேளம்" என்றதொரு சிறு கருவியால் கொட்டி ஆடிப் பாடிக் குதிப்பார்கள். எங்க தெருவிலே இன்னிக்குக் காலை 3 மணியிலிருந்தே போகி கொட்ட ஆரம்பிச்சு, ஒருவழியா ஆறு மணியோட முடிஞ்சது. இதற்கான காரணம் என்ன என்று சொல்லுவதென்றால் அதற்கும் கண்ணனே வந்துடறான் முந்திக் கொண்டு. இந்திரனுக்கு மற்றொரு பெயர் போகி என்பதாகும். மழையைப் பொழிய வைக்க இந்திரனை வணங்குவதுண்டு.

மழை பொழிய வைக்கும் இந்திரனுக்கு நன்றியாகவே தை முதல்நாள் அறுவடை ஆகும் பயிர்களை படையலாக வைத்து வணங்கும் வழக்கம் இருந்து வந்ததாய்த் தெரிய வருகின்றது. ஸ்ரீ கிருஷ்ணர் கோகுலத்தில் வளர்ந்து வந்தபோது இம்மாதிரி தை மாதம் இந்திரனுக்கு விழா எடுக்கும் நாள் வந்தபோது கிருஷ்ணர் கோகுலத்து மக்களை இந்த வழிபாட்டை நியாயமாய் கோவர்த்தனகிரிக்கும், அவற்றை எல்லாம் படைத்துக் காத்து ரட்சிக்கும் வாசுதேவன் ஆகிய ஸ்ரீமந்நாராயணனுக்கே செய்யவேண்டும் என்றும், ஆகையால் அவனின் அம்சம் ஆன சூரியநாராயணனுக்கு இந்த வழிபாட்டைச் செய்யும்படிக்கும் மாற்றத்தைக் கொண்டு வந்தார்.
ஆத்திரம் அடைந்த இந்திரன் கோகுலத்திலும், சுற்று வட்டாரத்தில் இதுவரை காணாத அளவுக்குப் பேய் மழையாகப் பொழிய, கோகுலமே நிலை குலைந்தது. கண்ணனோ சற்றும் கலங்காமல் கோவர்த்தனகிரியைக் குடையாய்ப் பிடித்து மக்களைக் காப்பாற்றினார். கோகுலத்தின் ஒரு ஈ, எறும்புக்குக் கூட துன்பம் நேராமல் பாதுகாத்தார். (இது பற்றி பின்னர் விரிவாய்ப் பார்ப்போம்). இந்திரன் வெட்கம் கொண்டு ஸ்ரீமந்நாராயணனைச் சரணடைய அவர் சங்கராந்திக்கு முதல்நாளை இந்திரன் பெயரால் போகிப் பண்டிகை எனக் கொண்டாடுவார்கள் என அவனை சமாதானம் செய்தாராம்.காளிங்க மடுவில் குதித்துக் கண்ணன் காளிங்கனை வதம் செய்தபோதும் இந்த மாதிரி ஒரு போகி நாள் என்றும், அன்று கண்ணனுக்குக் காளிங்கனின் விஷம் ஏறாதபடிக்கு ஆயர்பாடிச் சிறுவர்கள் தீ மூட்டி, பறை கொட்டி இரவு முழுதும் தாங்களும் விழித்திருந்து, கண்ணனும் தூங்காமல் விழித்திருக்கும்படிச் செய்தனர் என்றும் அதன் காரணமாகவே போகியன்று பறை கொட்டும் வழக்கம் ஏற்பட்டதாயும் தெரிய வருகின்றது.
பொங்கல் பானையை நல்லாத் தேய்த்துச் சுத்தம் செய்து சந்தனம், மஞ்சள், குங்குமம் தடவி, ஸ்வாமி அலமாரி இருந்தால் அதுக்கு முன்னால் கோலம் போட்டுப் பானையை வைத்து, மஞ்சள் கொத்து கட்டி, இஞ்சிக் கொத்து வழக்கம் உண்டானால் அதுவும் கட்டிட்டு, பின்னர் வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து "பொங்கலோ பொங்கல்" சொல்லச் சொல்லிவிட்டு எல்லார் கையாலேயும் பாலைப் பொங்கல் பானைக்குள் விடச் சொல்லவேண்டும். பொங்கலோ பொங்கல் என்று பின்னர் பொங்கல் பானையை அடுப்பில் ஏற்றி, வறுத்து வைத்த பாசிப் பருப்பை அதில் போட்டுப் பருப்புக் கரைந்ததும், வறுத்த பச்சரிசியை நன்றாய்க் களைந்து அதிலேயே போடவேண்டும். வீடுகளிலே பொங்கல் கரைய விட தண்ணீர் அதிகம் சேர்ப்பது இல்லை. பாலிலேயே கரைய விடுவோம். அவரவர் வசதிக்கேற்ற மாதிரிச் செய்து கொள்ளலாம். ஒரு ஆழாக்கு (200 கிராம் அரிசி என்றால் குறைந்தது 50கிராமிலிருந்து 100 கிராம் பருப்பு ஆகும். ருசியைப் பொறுத்து) அதற்கு அரை லிட்டர் பாலாவது தேவைப்படும். பத்தலைனா தண்ணீர் சேர்த்துக்கலாம். நான் ஒரு மு.ஜா. மு. அக்காவாச்சே. ஒரு வாரம் முன்னாலே இருந்தே அரை கப் பாலாகச் சேர்த்து, சேர்த்து எடுத்துக் காய்ச்சி முதலில் புதுப்பாலைக் கொஞ்சம் விட்டுப் பருப்பைக் கரைய விட்ட பின்னர் காய்ச்சி வச்சிருந்த பாலையும் சேர்த்துக்
வெல்லம் அவங்க அவங்க ருசிக்கு ஏற்றாற்போல் சேர்த்துக் கொள்ளவும். எப்படியும் அரை கிலோ வெல்லத்துக்கு மேல் வேண்டும் மேலே சொன்ன அளவு அரிசி, பருப்புக்கு. வெல்லம் சேர்ந்து வெல்ல வாசனை போகப்பொங்கல் கொதித்ததும், நெய்யில் முந்திரிப் பருப்பு, திராட்சை, தேங்காய் பல், பல்லாய்க் கீறிப் போட்டு வறுத்துப்பொங்கலில் சேர்க்கவும். ஏலக்காய், ஜாதிக்காய் வாசனைக்கு போடவும். வீட்டு முற்றம், கிணற்றடி, அடுக்குமாடிக் குடியிருப்பென்றால் சூரிய வெளிச்சம் படும் இடத்தில் சுத்தம் செய்து சூரியக் கோலம் போடவும். சிலர் வீட்டில் சந்திரனும் போடுவதுண்டு. சூரியன் வடக்கே நகருவதால் சூரியக் கோலமும் கொஞ்சம் வடக்கே போடணும்னு சொல்லுவாங்க. பின்னர் மஞ்சள் கொத்து, இஞ்சிக் கொத்து, வாழைப்பழம், கரும்பு, அரிசி, வெல்லம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, ஊதுபத்தி, சூடம், சாம்பிராணி, விளக்கு, மஞ்சள் பொடி, அட்சதை(மஞ்சள் தூளில் கலந்த அரிசி அட்சதை), தட்டு, கிண்ணங்கள், பசும்பால், தீப ஆராதனைத் தட்டுகள்,பூக்கள், மாலை கிடைத்தால் மாலை போன்றவற்றோடு உட்கார்ந்து முதலில் பிள்ளையார் பூஜை செய்து முடித்துவிட்டுப் பின்னர் சூரிய வழிபாடு செய்யவேண்டும். கற்பூர தீப ஆராதனைக்கு முன்னர் பொங்கலை செய்த பானையோடு கொண்டு வைத்து, கூடவே சாதம், பருப்பு, காய்வகைகள் போன்றவையும் வைத்து சூரியனுக்கு நிவேதனம் செய்யவேண்டும். பின்னர் கற்பூர தீபாராதனை செய்து விட்டுப் பின்னர் வீட்டில் ஸ்வாமி அலமாரியில் உள்ள தினமும் நிவேதனம் செய்யும் அனைவருக்கும் செய்துவிட்டுப் பின்னர் காக்கைக்குப் பொங்கல், சாதம், பருப்பு கொடுத்துவிட்டுப் பின்னர் விநியோகம் செய்ய வேண்டிய உறவினர், நண்பர்கள் இருந்தால் கொடுத்துவிட்டுச் சாப்பிடலாம்.

எல்லாத்தையும் விட முக்கியமானது இன்று பொங்கல் செய்யும் பானையையோ, அல்லது சாதம் வைக்கும் பானையையோ காலி செய்து இன்றே தேய்த்துச் சுத்தம் செய்யக் கூடாது என்பது ஐதீகம். பானை இன்று நிறைந்து இருந்தால் வருடம் பூராவும் இதே போல் நிறைந்து இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை! அடுத்த நாள் மாட்டுப் பொங்கல், கனுப் பண்டிகை இரண்டும் சேர்ந்து வருகின்றது. அது பற்றிப் பார்ப்போம்.
அடுத்த நாள் தை மாதம் இரண்டாம் தேதி மாட்டுப் பொங்கல், மற்றும் கணுப்பண்டிகை. இந்தக் கணுப்பண்டிகை காலையிலேயே முடிஞ்சுடும் என்பதால் அதை முதல்லே பார்ப்போமா?? கணுப்பிடி வைப்பது என்பது பெண்கள் மட்டுமே செய்யும் ஒன்று. தங்கள் உடன்பிறந்த சகோதரர்களின் நலனுக்காகச் செய்யப் படும் ஒன்று.தங்களோடு கூடப் பிறந்தவர்கள் எந்தக் குறையும் இல்லாமல் வாழ்விலே சுகம் அடையவேண்டும் என வேண்டிக் கொண்டு செய்வது. சகோதரர்களே இல்லை என்றாலும் மற்ற ஆண்களை சகோதரர்களாக நினைத்துக் கொண்டும், சகோதரர்கள் இருந்தாலும், இன்னும் மற்ற ஆண்களை சகோதரர்களாக நினைத்துக் கொண்டும் செய்யலாம். சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்குப் பிறந்த வீட்டுச் சீராகப் பணமோ, துணியோ கொடுப்பதுண்டு. தாய் வீடு பக்கத்திலேயோ அல்லது உள்ளூரிலேயோ இருந்தால் மதியம் சாப்பாட்டுக்கு சகோதரியை அங்கே அழைப்பதும் உண்டு.

மாட்டுப் பொங்கல் என்னும் கணுவன்று காலையில் முதல்நாள் சர்க்கரைப்பொங்கல் வைத்த பானையில் கட்டி இருக்கும் மஞ்சள் கிழங்கை எடுத்துக் கழுவி, ஸ்வாமி அலமாரியில் வைத்துவிட்டு, கை, கால் சுத்தம் செய்துகொண்டு, தானே அந்த மஞ்சள் கிழங்கை நுனியைக் கீறி விட்டுத் தன் நெற்றியிலும், கன்னத்திலும், கழுத்திலும் மூன்று முறை கீறிக் கொள்ளவேண்டும். பிறகு வீட்டில் உள்ள தங்களை விட வயதில் மூத்த பெண்மணிகளிடமும், அக்கம்பக்கத்தில் யாரானும் பெண்கள் அப்படி இருந்தால் அவர்களிடமும் கீறிக் கொள்ளலாம். முதல் நாள் செய்து மீந்திருக்கும் சர்க்கரைப் பொங்கல், மற்றும் அதற்கெனத் தயார் செய்த குழம்பு, எடுத்துக் கொள்ளவேண்டும். முதல் நாள் சாதத்தில்,தயிர் விட்டு, உப்பும் போட்டுப் பிசைந்து கொள்ள வேண்டும். இதை மஞ்சள் சாதம், குங்கும சாதம், தயிர்சாதம் என மூன்று வகையில் ஆக்கிக் கொள்ளவேண்டும். மஞ்சள் சாதம் மஞ்சளுக்கு வீட்டில் இருக்கும் பச்சை மஞ்சள் கிழங்கையே அரைத்துக் கொள்வது முன்பெல்லாம் வழக்கம். இப்போ யார் அம்மியிலெல்லாம் அரைக்கிறாங்க! அதனால் மஞ்சள் பொடியே கலந்து கொள்ளலாம். குங்குமம் கலந்து கொள்ளலாம். ரொம்பக் கலந்தால் அப்புறமாக் காக்காயெல்லாம் பயந்துக்கும்.

முன்பெல்லாம் நதிக்கரையில் வைப்பாங்களாம். அப்புறமா வீட்டு மொட்டை மாடியிலே வைப்பாங்க. இப்போ நதிகளே இல்லை, கரைக்கு எங்கே போறது? நம்ம வீட்டிலே மொட்டை மாடி இருக்கு. அதனால் அங்கே கணுப்பிடி வைக்கும் இடத்தைப்பெருக்கிச் சுத்தம் செய்து கோலம் போட்டு, செம்மண் இட்டுத் தயாராய் வைக்கணும். மஞ்சள் இலைகள் தான் போடணும் கணுப்பிடிக்கு. வெங்கலப் பானையில் கட்டிய மஞ்சள் கொத்தில் இலை எடுக்கிறாப் போல் இருந்தால் நல்லது. இல்லைனா வேறே இலை வைச்சுக்கணும். விலைக்கு வாங்கறவங்க இதை எல்லாம் எண்ணிப் பார்த்துட்டு மஞ்சள் கொத்து வாங்கணும். நாம விலைக்கு வாங்கற வழக்கமே இல்லை. இந்த சாதங்கள் தவிர, வெற்றிலை, பாக்கு, பழம்,தேங்காய், மஞ்சள், கரும்புத் துண்டுகள், சிலர் வீட்டில் தீப ஆராதனை காட்டும் வழக்கம் இருந்தால் அது, ஆரத்தி காட்டும் வழக்கம் இருந்தால் அதுவும் எடுத்துக் கொண்டு, ராகு காலம், எமகண்டம் இல்லாமல் பார்த்து கணுப்பிடி வைக்கணும். கணுப்பிடி வைச்சுட்டு உடனேயே குளிக்கணும்னு சொல்லுவாங்க. அன்று சமையலில் வித, விதமான சித்திரான்னங்கள் செய்வாங்க. சில வீடுகளில் துவையல், அப்பளம், பொடி இடம் பெறும். எங்க வீட்டிலே அது தான்!

இரவு சிலர் சாப்பிட மாட்டாங்க. அவங்க அவங்க வீட்டு வழக்கம் அது. "கார்த்திகை எண்ணெயும், கணுப்பழையதும் கூடப் பிறந்தவங்களுக்கு" என்று பெரியவங்க சொல்லுவாங்க. கார்த்திகைப் பண்டிகை விளக்கு ஏற்றுவதும் தென் மாவட்டங்களில் குறிப்பாய் மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் கூடப் பிறந்தவங்களுக்காக என்று சொல்லுவதுண்டு. கார்த்திகை அன்று பிறந்த வீட்டிலே இருந்து எண்ணெய், விளக்கு, திரிநூல், பொரி என்று எல்லாமும் சீர் வருவதுண்டு. அது போல கணுவும் உடன்பிறந்தவர்களின் நலனுக்காகக் கொண்டாடப் படும் பண்டிகை. மாட்டுப் பொங்கல்

நோவன செய்யன்மின் கொடிவன கேண்மின்
விடுநில மருங்கில் படுபுல் ஆர்ந்து
நெடுநில மருங்கில் மக்கட்கு எல்லாம்
பிறந்த நாள் தொட்டு சிறந்த தன் தீம்பால்
அறந்தறா நெஞ்சோடு அருள் சுரந்து ஊட்டும்" (சிலப்பதிகாரம்)

பதினைந்து வருடங்களே உயிர்வாழும் ஒரு பசுவின் பால் அதன் கன்றுக்குட்டிகள் வளர்ந்த பின்னும் தரும் பால் குறைந்த பட்சமாய் ஒரு நாளைக்கு 16,000 நபர்களின் பால் தேவையைப் பூர்த்தி செய்வதாய் ஓர் ஆய்வு கூறுகின்றது. ஆகையால் மாடு என்ற சொல்லுக்குப் பொருளே செல்வம் என்பது ஆகும் என்பதை நினைவு கூர்ந்து மாட்டுப் பொங்கலைக் கொண்டாடவேண்டும். மாட்டுப் பொங்கல் வரப் போகின்றது என்பதற்கு அத்தாட்சியாக முன்பெல்லாம் மாட்டின் கொம்புகளுக்கு பொங்கலுக்குப் பத்து நாட்கள் முன்பிருந்தே வர்ணம் அடிப்பார்கள். வசதி உள்ளவர்கள் கொம்பைச் சீவி, தங்கக் கொப்பி, பித்தளைக் கொப்பி, வெள்ளிக் கொப்பி போடுவதும் உண்டு. கழுத்தில் சலங்கை மணியும் கட்டுவதுண்டு. இங்கே வர மாடெல்லாம் மாட்டுப் பொங்கலன்னிக்குக் கூட அழுக்காவே தான் இருக்கு என்பது சோகமான விஷயம். மதுரையிலே அதிகம் பசுமாடுகள் தான் பார்த்திருக்கேன். எங்கோ ஒண்ணு, இரண்டு எருமை மாடு அப்போ பார்த்தால் அதிகம். மாட்டுப் பொங்கலன்னிக்குச் சாயங்காலமா ஊரிலே இருக்கும் அனைத்து மாடுகளும், சந்தைப் பேட்டையிலேயா, சந்தையிலேயா அங்கிருந்து கிளம்பி நாலு மாசிவீதிகளும் வரும். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டிற்குச் சில மாடுகள் போகும். ரேக்ளா வண்டிகள் போட்டி நடக்கும். மாசி வீதியில் போட்டி எல்லாம் போடாட்டியும், சில ரேக்ளா வண்டிகள் ஒண்ணை இன்னொண்ணு துரத்திட்டுப் போகும். இதை அங்கே மாடு விரட்டல்" என்ற பெயரில் சொல்லுவாங்க.

மாடுங்களையும் குளத்திற்கு அழைத்துப் போய் சுத்தம் செய்து அலங்கரித்துக் மாட்டுக் கொட்டாயிலே பூஜை பெரிசாய் நடக்கும். சாம்பிராணி, தீபாராதனை போது வெளிச்சம் பார்த்து மாடுங்க மிரளும். பிறகு மாடுங்களை அவிழ்த்து ஒண்ணொண்ணா விரட்டி விடுவாங்க. ஊரை ஒரு சுத்து சுத்திட்டுத் தானே கொட்டிலுக்கு வந்துடும். எப்போ வரும்னு தெரியாது. அங்கே இதை "மாடு மிரட்டல்"னு சொல்லுவாங்க. நிஜமாவே மாடுங்க மிரண்டும் போகும். இம்மாதிரி ஒரு நாலைந்து பொங்கல் இதைத் தவிர ஊர்கூடிப் பொங்கல் வைத்து, மாடுகளுக்குப் படைத்து, பெரிய அளவில் வழிபாடுகள் செய்வதும் உண்டு. தென் மாவட்டங்களின் கிராமங்களில் இப்போதும் அம்மாதிரியே கொண்டாடப் படுகின்றது. அப்போது மாட்டுச் சொந்தக்காரர்களும், மாட்டைப் பாதுகாப்பவர்களும் தவிர, பெண்கள் அங்கே திடலுக்குச் செல்வதில்லை என்றும் இந்த வழிபாடு முடிய இரவு மூன்று மணியாகும் என்றும், மறுநாளே ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றும் சொல்கின்றனர்.

Back to blog